பத்மராஜன் (திரைக்கதைகள்)
…மேற்சொன்ன உரையாடலை என்னிடம் பகிர்ந்த கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்த பத்மராஜனின் திரைப்படம், ‘நமக்குப் பார்க்கான் முந்திரித் தோப்புகள்’. பத்மராஜனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிட்டாமல் போனதால்தானோ என்னவோ பிற்பாடு பரதனுடனும், ஜான்பாலுடனும் இணைந்து தமிழில் படங்கள் செய்தார், கமல்ஹாசன். இந்தப் புத்தகத்துக்குள் செல்ல இருக்கும் பத்மராஜனை அறியா புதியவர்களுக்காகத்தான் இதுபோன்ற சுவாரஸ்யங்களை இங்கு சொல்கிறேன். புத்தகத்தில் ஆசிரியர் மணி சொல்லியிருப்பது போல, ‘குறுகியகாலத்துக்குகூட நிற்காத படங்களை எடுத்துவிட்டு வழிப்பறி செய்துவிட்டுப்போக சூத்திரங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். மனம் என்கிற காரியம் கைவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது’. திரைப்படங்களிலிருந்து திரைக்கதையை உருவி எடுக்காமல், வாழ்க்கையிலிருந்து திரைக்கதையைப் பார்ப்பதற்கு பத்மராஜனின் திரைக்கதைகள் உதவும். அதற்கு நல்லதொரு வழிகாட்டி, இந்தப் புத்தகம். – சுகா
