கடைசி பெஞ்ச்: இளையோருக்கான கவிதைகள்
யார் எது குறித்து பேசுகிறோம் யாருக்காகப் பேசுகிறோம் என்பது எல்லா காலகட்டத்திலும் முக்கியமான ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் கடக்கும் இந்த நோய்மையின் காலம் சமூகத்தின் எல்லா அடுக்குகளின் மனிதர்களின் மீதும் வயது, கல்வி, செயல்திறன், செல்வநிலை – இவற்றின் பாலான எந்தவிதமான வேறுபாடுமின்றி அவரவர் அளவில் தனது பாதிப்பினை செலுத்தியுள்ளது. குறிப்பாகப் பள்ளி செல்லும் குழந்தைகள், பதின்பருவத்தினர் மீது இக்காலம் ஒரு செயலாற்றாவியலா கொடும்பனியை இறக்கி இருக்கிறது. இந்நிலையில் இக்குழந்தைகளின் குரலாய் வெளிப்பட்டு, அவர்களுக்கு குளிர்காய்வதற்கான நெருப்பை அளித்து கதகதப்பை அளித்திருக்கின்றன இக்கவிதைகள் என்றால் மிகையன்று. பதின் பருவத்தினரை குறித்தே இவை பேசுகின்றன. அவர்களின் உலகத்தினை, அதில் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பருவமாற்றங்களை. பெரும்பாலும் தங்கள் முழு வாழ்விற்கான கல்வி, நட்பு மற்றும் லௌகீகப் புரிதல்கள் தொடங்கும் வயதாக இந்தப் பதின்பருவம் இருக்கும். இந்நிலையில் அவர்களது மாபெரும் கற்றுக் கொள்ளும் இடமான கல்விச்சாலைகள் இரண்டு வருடங்களாக தொடர்ந்து மூடியிருந்த நிலை.
