உள்ளுணர்வின் தடத்தில்
கவிதைகள் ஒரு மொழியின் உச்சகட்ட வெளிப்பாடுகள். பொருள் வழியாகவும் பொருளின்மை வழியாகவும் மொழி கவிதையின் வழியாக பேசிக்கொண்டிருக்கிறது. ஆகவேதான் இலக்கிய விமர்சனம் எப்போதும் கவிதையை தன் முதன்மையான பேசுபொருளாகக் கொண்டிருக்கிறது. உலக மொழிகளில் எங்கும் எத்தனை பக்கங்கள் கவிதை எழுதப்பட்டுள்ளதோ அதைவிட அதிகமாக கவிதை பற்றி எழுதப்பட்டுள்ளது. தமிழில் நமக்கு கவிதையியலுக்கு இலக்கியம் அளவுக்கே தொன்மை உண்டு. தொல்காப்பியத்தில் தொடங்குகிறது தமிழ் கவிதையியல். ஆனால் நவீனக்கவிதை பற்றி குறைவாகவே இங்கே எழுதப்பட்டுள்ளது. ஜெயமோகன் எழுதிய இந்நூல் நவீனக்கவிதைகளைப் பற்றிய விரிவான கட்டுரைகள் கொண்டது. இலக்கியவிமர்சனம் என்பது இலக்கியம் அளவுக்கே தீவிரமான மொழியனுபவம் ஆகமுடியும், அக எழுச்சி அளிக்கும் வாசிப்பை அளிக்கமுடியும் என்பதற்கான உதாரணங்கள் இக்கட்டுரைகள்