தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்
வாழ்வின் தீரா ஆச்சரியங்களும், முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை ப்ரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியற்ற நிதானத்துடன் கதைசொல்லும் ப்ரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். ஆண் / பெண் மனங்களில் பொதிந்து கிடக்கிற காமத்தின் மூர்க்கத்தனமும், வன்மமும் தெறிக்கத் தெறிக்க, அதன் பொருட்டெழுகிற பகையுணர்ச்சி என அவர் காட்டுகிற உலகம் என்றென்றைக்குமானது. பாலுணர்ச்சியின் எல்லையற்ற கற்பனைகள், உள்மன விகாரங்கள், அதன் மீதான சுய பகடிகள் என கதைகளில் இழையோடுகின்றன. ப்ரகாஷ் கதைகளில் வீழ்ச்சியுற்ற, தோல்வியடைந்த மனிதர்களை நாம் நிறைய சந்திக்கலாம். தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்கிறவர்களாக அவர்களை நாம் தெரிந்துகொள்கிறோம். நன்றாக வாழ்ந்தவர்கள், காலத்தால் சிதிலமுற்று தங்களின் கதையை அசைபோடுவது மிகுந்த மனச் சவாலுக்குரிய ஒன்று.