புறநானூற்று மேற்கோள்கள்:முனைவர் முத்து வெ. பிரகாஷ்
சங்க இலக்கியப் பாடுபொருள்களில் ஒன்றான புறப்பொருளில் பாடப்பட்ட 400 பாடல்களின் தொகுப்பு புறநானூறு. 150க்கும் மேற்பட்ட புலவர்களால் வெவ்வேறு காலங்களில் இப்பாடல்கள் பாடப்பட்டுள்ளன. சில பாடல்களின் ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. இப்பாடல்களை ஒரு நூலாக யார் தொகுத்ததுஎன்பதற்கும் சான்றுகள் இல்லை. இத்தொகுப்பில் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறுபட்ட சமூகச் செயல்பாடுகள் பதிவுசெய்யப் பட்டுள்ளன. இப்பதிவுகள் அக்காலத்தைச் சேர்ந்த சமூகத்தின் வெளிப்பாடுகளாக இருந்தாலும் இவற்றை அப்படியே ஒரு வரலாற்று ஆவணமாகக் கருத இயலாது; இலக்கியக் கருத்துகளாகவே கருத இயலும். வரலாற்றுச் சான்றுகளின் துணையோடு வரலாற்றை எழுதுவதற்குத் துணைபுரியும் துணைக் காரணியாக மட்டுமே கொள்ள இயலும். சங்க இலக்கியத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள எல்லா இலக்கியத்திற்கும் இது பொருந்தும்.