பொன்விழாவை நோக்கி CPM
கருமேகங்கள் சூழ்ந்த இந்திய அரசியல் வானில், உழைக்கும் மக்களின் விடிவுக்கு வழிகாட்டும் செந்தாரகையாய் தோன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி 50 ஆண்டுகள் கடந்துள்ளன. 1920ஆம் ஆண்டு தாஸ்கண்ட் நகரில் ஒரு சிறு குழுவால் ஆரம்பிக்கப்பட்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கொடூர அடக்குமுறைகளுக்கு முகம்கொடுத்து தளராது போராடிய தீரமிகு இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் பாரம்பரியத்தை உள்வாங்கி, இந்திய நாட்டின் சோசலிசம் நோக்கிய நெடும் பயணத்திற்கான அறிவியல் பூர்வமான பாதையை கண்டறிந்த கட்சியின் வரலாறு. மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் சுயமான ஆய்வுகள் மூலம் வலது சீர்த்திருத்த வாதம், இடது அதிதீவிர சாகச வாதம் தவிர்த்து நடந்த போராட்டப் பயணத்தின் வரலாறு. சர்வதேச அரங்கில் அன்று பெரும் பலத்துடன் விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டு, தனது சொந்தப் போராட்டங்கள் மூலம் இந்தியாவின் தலையாய இடதுசாரிக் கட்சியாக உயர்ந்த வரலாறு. அடைய வேண்டிய இலக்கு இன்னும் தொலைவில் தான்... ஆனால் வந்த வரலாற்றை அறிவது இன்னும் தொடர வேண்டிய பயணத்திற்கு உற்சாகம் அளிப்பது, உத்வேக மூட்டுவது...
