கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி
கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி மனிதர்களது பழக்கவழக்கங்கள், சிந்தனை, பகுத்தறியும் உணர்வு, சுபாவம் போன்றவை அவர்களது சுற்றுச்சூழல்களிலிருந்து ஆறு வயதிற்குள் அதிகமாக கற்றுக்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் நமது சமூகத்தில் உயர்கல்விக்கு குறிப்பாக கணிப்பொறி மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆரம்ப கல்விக்கு கொடுக்கப்படுவதில்லை. தமிழகத்தில் முதல் தலைமுறையினராக இன்றும் லட்சக்கணக்கான மாணவர்கள் தொடக்கப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முறை, கல்வியின் உள்ளடக்கம் மற்றும் பயிற்று முறை குறித்தும், அதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதயத்தில் இடம் தந்து குழந்தைகளை நேசிப்பதன் மூலம் நேர்மையான, துணிச்சல்மிக்க பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்வு காணக்கூடிய மனிதநேயமிக்க மனிதர்களை உருவாக்க இந்நூலாசிரியர் எடுத்த முயற்சிகளும், அனுபவங்களும் நமது சமூகத்திற்கும், செயல்பாடுகளுக்கும் உதவியாக இருக்கும்.
