ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய அரசியல் சூழல், சமூக நிலை, சமயங்களின் ஆதிக்கம் குறித்து அக்கறை கொண்டிருந்த சே.ப.நரசிம்மலு நாயுடு (1854 - 1922) பன்முக ஆளுமையாளர். பிரம்ம சமாஜ கொள்கையில் ஈடுபாடுடையவர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, தொழில் முனைவோர், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் என, அவருடைய செயல்பாடுகள் தனித்துவமானவை. காங்கிரஸ் சபையின் முதல் மற்றும் இரண்டாவது மாநாடுகளில் தமிழகத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றிருக்கிறார். வடஇந்தியாவில் இருக்கிற புண்ணியத்தலங்களுக்கும் வரலாற்றுச் சிறப்புடைய இடங்களுக்கும் பயணம் சென்றவர், தனது அனுபவங்களைத் தொகுத்து ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம் என்ற பெயரில் 1889-இல் நூலாக வெளியிட்டார். அது, தமிழில் வெளியான முதல் பயண நூல் என்றவகையில், சே.ப.நரசிம்மலு நாயுடு 'தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அன்றைய காலகட்டத்தில், இந்தியா பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றமாக விரிந்துள்ள இந்நூல் சமூகப் பதிவு; வரலாற்று ஆவணம்.