ஊரடங்கு உத்தரவு: புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு
1979ஆம் ஆண்டு மானமறவர்கள் எடுத்த போராட்டம் காரணமாகவே, புதுச்சேரி மாநிலம் இன்றும் தனித்து இருக்கிறது. இல்லையென்றால் ஒரு தமிழகத் தாலுக்காவாக இது இருந்திருக்கும். இந்த ஆகப்பெரும் போராட்டத்தை பி.என்.எஸ்.பாண்டியன் ஆவணப்படுத்தி இருப்பது புதுச்சேரிக்கு அவர் செய்திருக்கும் பெரும் தொண்டு; பெரிய சேவை; அரிய எழுத்துப் பணி. சுமார் ஆறாண்டு காலம், பாண்டியன் இந்த நூலூக்காக உழைத்திருக்கிறார். ஆறாண்டு வியர்வையும் ரத்தமுமே இந்தப் புத்தகம். அரசியல்வாதிகள் இதைப் படித்தால் அவர்களிடம் அரசியல் அறிவு விசாலமடையும். இளைஞர்கள் படித்தால் அவர்களிடம் நாட்டுப்பற்று மிகும். மாணவர்களிடம் இந்த வரலாறு மனிதத்தனம் மேலோங்கச் செய்யும். ஒரு அரசியல், பிரதேச வரலாறு என்ற முறையில், இந்த நூல் சுமார் பத்துநாள் வரலாற்றைச் சொல்லும் போக்கில், மாநில வரலாற்றையே சொல்லிவிடும் ஓர் அபூர்வமான புத்தகம் இது! எழுத்தாளர் பிரபஞ்சன் கட்சிமாறிகளால் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்தத் தேர்தல் அரசியல் வாணவேடிக்கைகள் அனைத்தையும் கதை சொல்லும் பாணியில் சொல்லிச் செல்கிறார் பாண்டியன். ஆண்டுகளை மாதங்களால் அடுக்கும் வரலாறு எல்லோராலும் ரசிக்கப்படுவதில்லை. ஆனால், நிகழ்வுகளால் கோர்க்கும் வரலாறு எவராலும் ஒதுக்கப்படுவதில்லை. பாண்டியன் எழுத்து கவனிக்கப்படும் எழுத்தாக இருக்கிறது. 1979ல் புதுவை தனது கற்பைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நடத்தியப் போராட்டக்களத்தில் காவல் அரணாக நின்றவர்களின் நேரடி வாக்குமூலங்களை வாங்கி, பாண்டியன் இந்த வரலாற்றை எழுதியிருப்பதுதான் நூலின் பலம். எழுத்தாளர் - ஊடகவியலாளர் ப.திருமாவேலன்