ஒற்றை வைக்கோல் புரட்சி
மசானபு ஃபுகோகா இந்தியா வந்திருந்தபோது பிரதம மந்திரி அலுவலகம் கொடுத்த அரசு விருந்தில் கலந்துகொண்டு உணவருந்திவிட்டு அறைக்குத் திரும்பிவிடுகிறார் அன்று மாலை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வேளாண்முறை சிறிய நாடுகளுக்கு ஒத்துவரலாம். ஆனால் இந்தியா போன்ற பரந்த தேசத்திற்குப் பொருந்தாது என்கிறார் அன்றைய பிரதமர் மறுநாள் கடுமையான காய்ச்சலால் பாதிப்படைந்திருந்த புகோகாவிடம் நண்பர்கள் உடல்நலம் விசாரித்த போது ஆமாம். இது நான் செய்த தவறால் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதிகார பலத்தால் ஏதாவது நன்மை சாத்தியப்படும் என நினைத்து அங்குசென்று உணவருந்தியது என் தவறுதான். அன்பால்தான் அனைத்தும் சாத்தியப்படும். இதைப் புரிய வைப்பதற்காகவே இந்தச் சிறு வாதையை இயற்கை எனக்குத் தந்திருக்கிறது. நான் மருந்து எடுத்துகொள்ளப் போவதில்லை எனச்சொல்லி உண்ணா நோன்பிருக்கிறார் ஃபுகோகா. சமகாலத்தில் சர்வதேச அரசமைப்புகள் பலவீனமடைந்து, அதன் அதிகாரக் கொள்கைகள் பிடிப்பிழந்து வீழ்ந்திருப்பது இயற்கைக்குத் திரும்புதல் எனும் அவரின் அனுபவ வாழ்முறை உலகம் முழுமைக்குமான தீர்வாக இருப்பதை அறியமுடிகிறது இளைய தலைமுறை கருத்தாக்கங்கள் இந்த அடிமண்ணிலிருந்தே முளைக்கத் துவங்கியிருக்கிறது. ஃபுகோகா, இவ்வேளாண்முறைக்குள் தன்னை முழுமையாக ஆட்படுத்திக்கொள்ள தனது நிலத்திற்கு வந்துசேர்ந்த நாளின் முதற்விடியலை மனதிலேந்தி, இயற்கையின் மாறாத தத்துவத்தில் வேர்விட்டு நிற்கும் இந்நூலை அனைவரிடத்தும் கொண்டுசேர்ப்போம். மாறுதலுக்கான வாசல் எக்காலத்தும் திறந்தேயிருக்கிறது.
