சூளாமணி: மூலமும் உரையும்
செம்மொழி இலக்கியங்களுள் சிந்தை கவரும் சிறப்புகளுக்கு அணிசேர்ப்பனவாக இருப்பவை காப்பியங்கள். தமிழ்மொழியில் தோன்றியுள்ள காப்பியங்களுள் ஒன்று சூளாமணி. அணிந்து மகிழும் அணியொன்றின் பெயரால் நடக்கும் காப்பியம் இது. இல்லறத்தில் சிறந்தோங்கிப் பின்னர் துறவறத்தில் நின்று பெருநிலை அடைதல் வேண்டும் என்னும் வாழ்க்கை நிலையைச் சுட்டுகிறது. சீவக சிந்தாமணியின் செம்மைப் பண்புக் குறையாவண்ணம் அதற்குப் பின்னர் எழுந்த அணிபெறு காப்பியம் சூளாமணி. - இக்காப்பியம் அறம்பொருள் இன்பம் வீடு என நாற்பொருளும் எண்வகைச் சுவைகளும் நிரம்பப் பெற்றது. இது 12 சருக்கங்களும் 2130 செய்யுள்களும் கொண்ட சீரிய காப்பியம். சூளாமணிக் காப்பியத்தை எழுதியவர் தோலாமொழித் தேவர் என்னும் பெருமகனார், அவர் உளவியல் அறிவும் உலகியல் தெளிவும் அரசியல் ஞானமும் கைவரப்பெற்றவர். சமண சமயம் சார்ந்த துறவி. சமண அறங்களை உரைப்பதனையே நோக்கமாகக் கொண்டு திவிட்டனுடைய கதையை இணைத்துச் செல்வது காணத்தக்கது.