சிங்கார வேலர் கட்டுரைகள்
கடந்த நூற்றாண்டில் ஐம்பதுகளுக்கு முன் தமிழகம் சிந்தனையின் ஊற்றுக்களமாக விளங்கிற்று. ஒரு புறம் நாட்டு விடுதலைக்காகப் போராடிய காந்தியச் சிந்தனை கண்ட பேரெழுச்சி, மறுபுறம் பெரியார் ஈ வெ. ராமசாமி கண்ட சுயமரியாதை இயக்கத்தின் பேரலை. இந்த இருவர் கண்ட இயக்கங்களைத் தன்வயமாக்கிக் கம்யூனிஸ்டுத் தலைவராக மிளிர்ந்தவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். பின் வந்த மாற்றங்கள் பலப்பல. சிந்தனைகள் சிதறிப்போயின. இயக்கங்கள் உடைந்து பிரிந்து நீர்த்துப் போயின. இந்திய தேசிய காங்கிரசும், திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் இப்போக்குக்கு விலக்கல்ல.அறிவியல் நோக்கு, அறிவியல் ஆய்வு கடந்த நூற்றாண்டின் முழக்கங்களாக இருந்தன. அறிவியல் கழகங்கள் பல, ஆய்வுக் களங்கள் பல தோன்றின. ஆனால் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு முதலில் சில காலம் அறிவியல் வளர்ச்சி தேக்கம் கண்டபோதிலும் பின்னர் சற்று மெதுவாக வளர்ந்து வந்தது.