{"product_id":"sigaram-senthilnadhan","title":"சிகரம் செந்தில்நாதன் (பாதை - பயணம் - படைப்புலகம்)","description":"\u003cp\u003eகேள்வி: திராவிட கட்சிகளில்கூட முன்பு இருந்ததைப் போல பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் உடையவர்கள் இல்லை. ஆட்சி அதிகாரத்தாலும் பொருளாதார பலத்தாலும்தான் கட்சிகளை நடத்தி வருகிறார்கள். தேசிய கட்சிகளில் கூட கொள்கை வலிமை இல்லை. நூற்றுக்கணக்கான கவிஞர்களும் எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் பத்திரிகைகளும் உலாவந்த இயக்கத்திற்கே இந்த நிலைமை. கலாச்சார சீரழிவை தடுக்க அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? பதில்: திராவிட இயக்கத்தில் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் மேடைப்பேச்சுத் தமிழை ஒரு கலையாக வளர்த்தார்கள். அவர்கள் பாணியைப் பின்பற்றி பலபேர் மேடை ஏறி அதே பாணியில் பேசத் தொடங்கினார்கள். அடுக்கு மொழி, எதுகை மோனை, அலங்காரச் சொற்கள், அடைமொழிகள் ஆகியவை எல்லாம் அந்தப் பாணியில் அடங்கும். ஆனால் எல்லாத் திராவிட இயக்கத்தவரும் அப்படியே பேசினார்கள் என்று சொல்ல முடியாது. திராவிட இயக்கத்தின் தலைவர் பெரியாரின் மேடைப்பேச்சு வேறுவிதமானது. தி.மு.க.வில் இருந்த ஈ.வெ.கி. சம்பத், கண்ணதாசன் போன்றவர்கள் மேடைப்பேச்சு அண்ணா கலைஞர் பாணி அல்ல. எழுத்தும் அப்படியே. தமிழ் மொழியின் அழகு, ஆற்றல் ஆகியவற்றை முன்னிறுத்திப் பேசுவது, மொழி இனம் சார்ந்த கட்சிக்கு ஒரு தேவையாக இருந்தது. தமிழ் ஒரு பரப்புரைக் கருவியாக இருந்தது. இன்றைய அரசியல் போக்கிற்கு அந்த நடை அவசியம் இல்லாததாலும், அண்ணா கலைஞர் பேச்சு நடையைக் காப்பியடித்துப் பேசிய பலர் அதை நீர்த்துப் போக செய்துவிட்டதாலும், இப்போது மேடைப் பேச்சு ஒரு இயல்பு நடைக்கு மாறிவிட்டது. இருந்த போதிலும் திராவிட இயக்கத்தவர் சரளமான மொழியில் பேசுகிறார்கள் என்பது உண்மை. இயல்பான நடையிலும் எழுச்சியுடன் பேச முடியும் என்பதற்கு வைகோ ஓர் சான்று. நாஞ்சில் சம்பத், குமரிஅனந்தன் முதலியோர் தனி நடையில் மக்களை ஈர்க்கும் வகையில் பேசுகிறார்கள். திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள் மாறியதும் மேடைத் தமிழ் நடை மாறியதற்கு ஒரு காரணமாக அமையலாம். தி.மு.க.வில் முதன் முதல் அகில இந்திய அரசியல் பேசியவர் ஈ.வெ.கி. சம்பத். சம்பத் கட்சியிலிருந்து பிரிந்து தமிழ்த் தேசியக் கட்சி ஆரம்பித்தபோது, அவர் மீது அண்ணா சுமத்திய குற்றச்சாட்டு என்ன தெரியுமா? “தம்பி சம்பத் இந்தியனாகிவிட்டான்” என்பது தான். இப்போது எல்லாரும் இந்தியனாகிவிட்டார்கள். இந்திய அரசியல் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தனி நாடு கோரிக்கையை திராவிட இயக்கமே கொன்றுவிட்டது. மாநில உரிமை என்ற நிலையில் அதற்கு மாற்று வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் தான் ஆரம்பித்த அ.தி.மு.கவை அனைத்திந்திய அண்ணா தி.மு.க என்று பெயர் மாற்றினார். அது ஏன் என்பதை அவர் பெரிதாக விளக்கவில்லை. தொண்டர்களுக்கும் அக்கறை இல்லை. தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு காலத்தில் ஏராளமான எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும் கொண்டிருந்தது. ம.பொ.சி.யின் பின்னால் ஒரு படையே இருந்தது. திராவிட இயக்கத்தை அவர்கள் எதிர் கொண்டார்கள். இப்போது காங்கிரசில் “இலக்கியச் செல்வர்” இருக்கிறார். ஆனால் இலக்கியம் இல்லை. காங்கிரஸ் தன்னுடைய தமிழ்த் தளத்தை இழந்துவிட்டது. இழந்ததைப் பெறுமா என்பது கேள்விக்குறியாகவே தொடர்கிறது. ஆனால், இடதுசாரி இயக்கத்தின் நிலை அப்படி அல்ல. பண்பாட்டுத் தளத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஒரு மாபெரும் சக்தியாக விளங்குகிறது. ஏராளமான படைப்பாளிகள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இந்த அமைப்பில் இருக்கிறார்கள். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் இடதுசாரி சிந்தனை உடைய அமைப்புகள் தமிழகத்தில் உள்ளன. முற்போக்கு இயக்கத்தின் மகத்தான தலைவராக ஜீவா இருக்கிறார். அதைத் தொடர்ந்தவர் கே. முத்தையா. கலைஇலக்கிய அமைப்புகள் எவ்வளவு வலுவான நிலையில் இருந்தாலும், இடதுசாரி கட்சிகளுக்கும் மக்களுக்குமிடையே இடைவெளி சற்று அதிகமாகவே இருக்கிறது. தமிழக மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியைத் தங்கள் கட்சியாகப் பார்க்கிறார்களா என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது. அதைத் தொழிற்சங்கம் நடத்துகிற கட்சியாகப் பார்க்கிறார்கள். தொழிற்சங்கங்கள்மீது மக்களுக்கு மரியாதை இல்லை. மண்ணோடு ஒட்டாது அந்நியப்பட்டு நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சி வெகுஜன கட்சியாக மாறாததில் வியப்பில்லை. என் படைப்புகள் மண் சார்ந்தவை. இடதுசாரி இயக்கம் வெகுஜன இயக்கமாக மாறும் போது என்னுடைய படைப்புகள் அதற்கு உதவும்.\u003c\/p\u003e","brand":"சந்தியா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53813461713259,"sku":"BK3588","price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/sigaram-senthilnadhan.jpg?v=1788772964","url":"https:\/\/anytamilbooks.com\/products\/sigaram-senthilnadhan","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}