ரோசா லக்சம்பர்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
20 ஆம் நூற்றாண்டின் புரட்சிகரச் செயல்பாடுகளிலும் மார்க்சிய சிந்தனையிலும் ரோசா லக்சம்பர்க் முதன்மையானதோர் இடத்தை வகிக்கிறார்.1871 ஆம் ஆண்டில் போலந்தில் ஒரு மத்தியதர வர்க்க யூதக் குடும்பத்தில் பிறந்தவர் இவர், இளமையிலேயே போலந்தை விட்டு வெளியேறி சில காலம் ஸ்விட்சர்லாந்திலும் பின்னர் ஜெர்மனியில் சமூக சனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் வாழ்ந்தார். மிகச் சிக்கலானதொரு காலகட்டத்தில் ஜெர்மானிய சமூக ஜனநாயகக் கட்சிக்கும்,சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் அடிப்படையிலான பங்களிப்பை வழங்கினார்.அக்காலத்திய அரசியல் நெருக்கடிகள் அவரது வாழ்வின் கடைசி ஆண்டுகளையும் நிர்ணயித்தன.1919 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் எதிர்ப் புரட்சியாளர்களால் ரோசா லக்சம்பர்க் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். 1898ல் ரோசா லக்சம்பர்க் எழுதிய "சீர்திருத்தமா, புரட்சியா?" என்ற நூல் வெளிவந்தது.முதலில் கட்டுரைகளாக எழுதப்பட்டு பின் அது நூல் வடிவம் பெற்றது. எட்வர்ட் பெர்ன்ஸ்டெயினின் சீர்திருத்தவாதத்திற்கு எதிரான அடிப்படையிலான வாதங்களை ரோசா தனது நூலில் முன்வைத்தார். சோசலிசம்தான் சமூக வரலாற்றின் அடிப்படையிலான முரண்களைத் தீர்ப்பதற்கான ஒரே வழிமுறை என்பதை மறந்து பெர்ன்ஸ்டெயின், அது ஏதோ நமது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக கொள்கிறார் என்று ரோசா வாதிட்டார். புரட்சி என்பது வரலாற்றின் தவிர்க்க முடியாத தேவை,வரலாறு நெடுக சமூக முரண்கள் தீவிரமடைந்து வருகின்றன, முதலாளிய சமூகத்தில் அவை உச்சத்தை எட்டுகின்றன,அதுவே மார்க்சியக் கோட்பாட்டின் தருக்கவியல் என்று ரோசா லக்சம்பர்க் எடுத்துக்காட்டினார்.