ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது
புதிய நிலம், புதிய அறிவு, புதிய அனுபவம் என்று பரவவேன்டியப் பெண் அலையை முடக்கி வைத்துக் கொண்டிருக்கும் உலகு முழுமை அடைய முடியாது என்கிறார் உமா மோகன். இதை அவர் நேரிடையாகச் சொல்லவில்லை. சொல்லக் கூடாது ஏன் என்றால் இது கதை. கதைகளுக்கு என்று மாறுதலாகச் சொல்முறை இருக்கவே செய்கிறது. கதையில் வரும் பெண்களின் பயணம் தேடுதலின் தொடக்கம்தான். பயம்,மிரட்சி,எல்லாம் இருக்கும்தான் அனைத்தையும் மீறியே அவர்கள், அவர்களை அறியாமலையே ஒரு புதிய விழிப்புக்கு உள்ளாகிறார்கள். எல்லாப் பயணும் முதல் அடியில் இருந்தே தொடங்குகிறது. உனக்கு இது இடம், எனக்கு இது இடம், ஆணுக்கு இது, பெண்ணுக்கு இது என்றெல்லாம் வகுக்கப்பட்ட இடம், களம், எல்லாம் உடைகிறது. உடைவது ஏதோ ஒரு மாற்றம் கொள்கிறது. பழமைகள் அவைகளின் பிடிகள் இன்னும் இற்று விழுந்ததாக இல்லை என்றாலும், புதியது என்கிற ஒன்று அரும்புகிறது. உமா மோகனின் கதைகளில் பல அரும்புகள்.