பொக்கை வாய்
வாழ்வின் மீதான சுயஎள்ளல் என்பது வாழ்வு தருகின்ற அழுத்தத்திற்கு எதிரான ஒரு பலகீன எதிர்ப்பாக மாறுகின்ற கணத்தில் கவிதையானது தனது நிலத்தில், உடல்களில், ஆதார உணர்வுகளில் அதுவரை வெளிப்படுத்திவந்திருந்த அழகுணர்வுக்கு மாற்றான வினோத வடிவங்களை, சௌகரியங்களைத் துண்டிக்கும் விதமான பதற்றங்களைத் தனது குரலாக வெளிப்படுத்தத் துவங்குகிறது. நெகிழனது இத் தொகுப்பில், முழுமை கூடிய, ஒரு சொல்லை நகர்த்தினால்கூட உடைந்து விழக்கூடிய கணிசமான கவிதைகளை வாசித்தபோது, வாழ்வின் அந்தக் கச்சாவான உயிர்த் தருணங்களை இவன் மேலும் மேலும் இப்படிச் சமீபத்துக்கொள்ள வேண்டுமென உள்ளூர மிக விழைந்தேன். கவிதையின் முடிவை ஒரு கேரிகேச்சரைப்போல, கேலியான ஓவியத் தன்மைக்கு மாற்றிவிடுகின்ற நெகிழனது தனித்துவம் சமகால கவிதையுலகின் புதிய பண்புகளில் ஒன்று. - பா.திருச்செந்தாழை