படைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள்
மூத்த படைப்பாளிகள் மற்றும் சக படைப்பாளிகளின் படைப்புலகம் குறித்த என்னளவிலான முதல் தகவல் அறிக்கை என்ற அளவில் இந்தக் கட்டுரைகளுக்கான முக்கியத்துவம் உள்ளது. சமகாலத் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறையில் விமர்சன உணர்வு மழுங்கி, ஒரு படைப்பு அதிகமாகப் பேசப் படுவதற்கும் புறக்கணிக்கப்படுவதற்கும் படைப்பல்லாத காரணிகளே அதிகம் செயல்படும் நிலையில், விமர்சனச் சூழலுக்கான ஒரு ஏக்கம் என்று இந்த எழுத்துகளை நான் சொல்லத் துணிவேன். சென்னை மெரினா கடற்கரை சாலையில் பயணிப்பவர்கள் அனைவரது கண்ணுக்கும் படும் இடத்தில்தான் ‘உழைப்பாளர் சிலை’ இருக்கிறது. ஆனால் அந்தப் படைப்பைச் செதுக்கிய சிற்பியின் படைப்புணர்விலிருந்து அவன் வெளிப்படுத்த விரும்பும் அர்த்தத்தை நெருங்குவதற்கு எத்தனை பேருக்கு வாய்ப்பிருந்தது? இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் சில சிறுபத்திரிகைகளில் எழுதப்பட்டவை. சில கட்டுரைகள் நாளிதழில் எழுதப்பட்டவை. அபூர்வமாகச் சில கட்டுரைகள் எழுதப்பட்டு, பிரசுரம் ஆனவுடனேயே வாசித்து விவாதிக்கப்பட்டவை.