நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்
'நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்' பத்தி எழுத்துக்களின் தொகுதி. படிப்பவர் மனதில் பரவசத்தையும் தமது உசுக்குட்டிப்பருவத்தின் நினைவுகளையும் நம் ஒவ்வொருவரின் மனத்திலும் பிரவாகமாக ஓடச்செய்திருக்கிறார். 1996இல் 'எரிநெருப்பிலிருந்து' எனும் கவிதைத்தொகுதி மூலம் அறிமுகமான அறபாத், இருபது வருட எழுத்து ஊழியத்தின் மூலம் தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக் கொண்டவர். கதை, கவிதை, விமர்சனம், பத்தி எழுத்துக்கள் என்று 11 நூல்களின் சொந்தக்காரர். தனது படைப்புகளுக்கு மாகாண மட்டத்திலும் தேசிய ரீதியிலும் பல விருதுகளைப் பெற்றவர். ஐம்பது அத்தியாயங்களில் சுழிவிட்டுக் குதூகலிக்கும் நினைவோடைகளின் சொட்டும் நீர்த்திவலைகளை ஒரு சரமாக வடிவமைத்திருக்கிறார். அவரின் அனுபவங்களை நமது அனுபவங்களாக மாற்றும் வித்தை அவருக்கு கைகூடி வந்திருக்கிறது. அறபாத்தின் ஒவ்வொரு காலடி மண்ணின் ஈரமும், அதன் வாசனையும் ஒவ்வொரு பத்தியிலும் கண்சிமிட்டி களிப்பூட்டுகிறது. - எஸ். எல். எம். ஹனீபா
