மார்க்சின் தத்துவம் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
அல்தூசருக்குப் பிறகு மார்க்சியம் எப்படி ஆனது? என்று ஒரு கேள்வியைக் கேட்பது சுவையானதாக இருக்கும்.அந்தக் கேள்வியை அல்தூசரின் மாணவர்களிடமே கேட்டுப்பார்க்கலாம்.அத்தகைய ஒரு நோக்கத்துடன் தான் எட்டியேன் பாலிபர் என்ற அல்தூசரின் மாணவர் மார்க்சின் தத்துவம் என்ற இந்நூலை எழுதியிருக்க வேண்டும். மார்க்ஸ்,எங்கெல்ஸ் மறைவுக்குப் பின்(1883,1895)இரண்டாம் உலகப்போர் முடிந்த காலம் வரையில் சுமார் 45 ஆண்டுகளில் மார்க்சியம் ஒரு சிரமமான வாழ்க்கையை அனுபவித்தது. தலைவர்களை இழந்தமை ஒரு காரணமாக இருக்கலாம்.இடையில் 1917ல் ரஷ்யப் புரட்சி ஒன்றே ஆறுதலான நிகழ்வாக அமைந்தது. அக்டோபர் புரட்சிக்குப் பிறகான காலம் சோவியத்துக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தமும் பனிப்போர் காலமும். தத்துவ உலகில் முதலில் பாசிட்டிவியம் எனப்பட்ட நேர்க்காட்சிவாதமும் பின்னர் பிராய்டியம், நிகழ்வியல், இருத்தலியம் போன்றவையும்.லெனினுக்கு பிறகு குறிப்பான தத்துவ சாதனைகள் எதுவும் நிகழவில்லை. மேலே குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு,வலுவான மார்க்சிய சிந்தனையாளர்களாக லூயி அல்தூசரையும் அந்தோனியா கிரம்ஷியையும் தான் குறிப்பிட வேண்டும்.