மனவளமான சமுதாயம்
உலகின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான எரிக்பிராம் எழுதிய நூல்கள் இதுவரை, முழுமையாக தமிழில் மொழிபெயர்ப்பாகவில்லை. அவரது மேற்கோள்களை மட்டுமே, கையாண்டு வந்தனர். அவர் எழுதிய நூல் ஒன்று, முழுமையாக தமிழில் வெளிவந்து உள்ளது இதுவே முதல் முறை. எரிக்பிராம், நவ மார்க்சியவாதி என்றும், மார்க்சியத்துக்கு எதிரானவர் என்றும், இருவேறு கருத்துகள் உள்ளன. இந்நிலையில், அவரின் 'மனவளமான சமுதாயம்' நூல், முக்கியத்துவம் பெறுகிறது. நூலை படிப்பதற்கு முன், மொழிபெயர்ப்பு ஆசிரியர், எழுதி உள்ள நூலின் முன்னுரை, மிக முக்கியமானது. எரிக்பிராம் யார், அவரின் கருத்துகள் என்ன என, ஒரு விரிவான அறிமுகத்தை, முன்னுரை தருகிறது. இதன்மூலம், நூலை படிப்பது எளிதாகிறது. ஒரு சமூகம், ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப, தன்னை கட்டமைத்து கொள்கிறது. இதற்கு, சமூக மற்றும் பொருளாதார காரணிகள் அடிப்படையாக உள்ளன. அவை, ஒவ்வொருவர் மீதும், உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள், சமூகத்தை எப்படி கட்டமைக்கின்றன என்பதை தான், 'மனவளமான சமுதாயம்' நூலில், எரிக்பிராம் சொல்கிறார். பொதுவுடைமை, நில உடைமை போன்ற தத்துவங்கள், இந்த தாக்கங்களால் ஏற்பட்டவை என்றும் குறிப்பிடலாம். மாற்றங்களுக்கான, சமூக மற்றும் பொருளாதார காரணிகள் எவை, அதனால் தனி மனிதனுக்குள்ளும், சமூகத்துக்குள்ளும் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதையும், இந்தநூலில் பட்டியலிடுகிறார் ஆசிரியர். இன்றைய சமூக கட்டமைப்பில், 'மனிதவளமான சமுதாயம்' நூல் மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இந்தநூலில் சொல்லப்படும் அல்லது விவாதிக்கப்படும் கருத்துகளை, ஒருமுறை அல்ல, பலமுறை படித்துக் கொண்டே இருக்கலாம். வசுமித்ர, கவிஞர்
