மக்கள் மயமாகும் கல்வி
"இந்தியக் கல்வி அமைப்பிற்கு நான் அளிக்கும் பெயர் “ Architecture of Exclusion”. நாட்டின் மிகப் பெரும்பாலான குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வளர்ச்சியும், வாய்ப்பும் மறுக்கும் இதயமற்ற அமைப்பு. சமுதாய பிரமிடின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒளிரும் இந்தியாவின் தேவை, ஆதிக்கம் ஆகியவற்றிற்காகவே கட்டப்பட்டு, மற்ற அனைத்து மக்களையும் வாடும் இந்தியாவாக உழலச் செய்யும் கட்டமைப்பு. உலகில் எங்குமே இல்லாத கொடிய ஏற்றத் தாழ்வுகள் கொண்ட, வர்க்க-சாதிய அமைப்பு. கல்வியின் அனைத்துப் பகுதிகளும், அதன் உள்ளடக்கம், கற்பித்தல் முறைகள், கல்வி மொழி, தேர்வு முறைகள், அனைத்தும் அதே வர்க்க-சாதியத் தன்மை கொண்டவையே. நமது அரசியல் சாசன விழுமியங்களை சிதைத்தொழிக்கும் அமைப்பு. அரசு தன் அடிப்படைப் பொறுப்புகளை உதறித் தள்ளி விட்டு, கல்வி பெரிதும் தனியார் மயமாக, வணிகமயமாக அனுமதித்து, வேடிக்கை பார்க்கும் அமைப்பு. இன்று இது காவிமயமாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது. இன்று நம் அனைவர் முன் நிற்கும் முக்கியப் பொறுப்பு, இன்றைய கல்வி அமைப்பை முழுதும் உடைத்தெறிந்து, மாற்று அமைப்பைக் கட்ட வேண்டும். நம் அரசியல் சாசனக் கனவுகளை மீட்டெடுக்க வேண்டும். ஜனநாயக இந்தியா, சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகிய ஆதார விழுமியங்களை, சமரசமின்றி நிறுவும் கல்வியை, மனித நேயக் கல்வியை நாட்டின் அனைத்துக் குழந்தைகளுக்கும் பிறப்புரிமை ஆக்க வேண்டும்.
