கௌரவன் (நூல் பொதி)
கௌரவன் - உருட்டிய பகடைகள் (பாகம் 1) | Ajaya 1 : நாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும் நயவஞகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘ கௌரவன்’ துரியோதனன். பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. குரு வம்சத்தின் ஆட்சிப் பொறுப்பாளரான பீஷ்மர், தன் அரசின் ஒற்றுமையைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார். பார்வையற்ற திருதராஷ்டிரன், அந்நிய நாட்டைச் சேர்ந்த தன் மனைவி காந்தாரியுடன் அரசு பீடத்தில் அமர்ந்திருக்கிறான். இறந்துவிட்ட அவனுடைய தம்பி பாண்டுவின் மனைவியான குந்தி, தன் மூத்த மகன் தர்மனை அரியனையில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறாள். இது ஒரு புறம் இருக்க ---- அதே அஸ்தினாபுர அரணமனைத் தாழ்வாரங்களில் பரதகண்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான் ஒர் அந்நிய நாட்டு இளவரசன். அவன் உருட்டிய பகடைகள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருக்கின்றன. கௌரவன் - பிறந்தது கலி (பாகம் 2) | Ajaya 2 : நாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் 'கௌரவன்' துரியோதனன். இந்த இரண்டாம் பாகத்தில் - போர் மேகங்கள் வெகுவேகமாகச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. தர்மம் மற்றும் அதர்மம் பற்றிய விவாதங்கள் சூடாக நடைபெறுகின்றன. அதிகாரப் பசி கொண்ட ஆண்கள் அனைத்தையும் நிர்மூலமாக்கப் போகின்ற ஒரு போருக்குத் தயாராகின்றனர். பெண்களும் பிராமணர்களும் தங்கள் கண்முன்னால் கட்டவிழ்ந்து கொண்டிருக்கின்ற பேரழிவைப் பெரும் அச்சத்துடனும் கையாலாகாத்தனத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பேராசைமிக்க வணிகர்களும் சூழ்ச்சிகரமான புரோகிதர்களும் கழுகுகள்போலக் காத்துக் கொண்டிருக்கின்றனர். தன் பங்குக்கு ஓர் 'அவதாரமும்' சளைக்காமல் சதி செய்து கொண்டே இருக்கிறது. இருண்ட கலிகாலம் உதயமாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வோர் ஆணும் பெண்ணும் கடமைக்கும் மனசாட்சிக்கும் இடையேயும், கௌரவத்திற்கும் அவமானத்திற்கும் இடையேயும், உயிர்பிழைத்திருத்தலுக்கும் சாவுக்கும் இடையேயும் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்
