சின்னக் குடை
நியதிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல இந்த வாழ்க்கை. விருப்பங்களுக்குக் கட்டுப்பட்டது. மனம் விரும்பும் பக்கமே மனிதக் காற்றாடி பறக்கிறது. நாகப்பன் தன் வாழ்வை அறிந்தவன். ஆயினும், ஜமீன் மகள் தாரகையைக் காதலித்துக் கூடுகிறான். அவளை இழந்த பின்னும் வேறோர் இடம்பெயர்ந்து வாழ்க்கையில் ஆழ்கிறான். டி.ஆர்.ராஜகுமாரியின் பாடலொன்றை வெங்கோஜி பாடிவிட்டால் போதுமென விரும்பும் ரசிகன் செங்கையனுக்குத் தஞ்சையில் இசை கற்றிடும் வாய்ப்பே கிட்டுகிறது. வெங்கோஜி தன் சீடனின் மடியில் இறக்கிறார். இன்பனுக்கு நியதிகள் தெரியும். ஆயினும் அசட்டையாய் இருந்து நெடுஞ்சாலை ஓரமிருக்கும் வீட்டையும் இழப்பீட்டையும் இழக்கிறான். அவன் மனம் முழுவதும் கனகாங்கி மீதான காமமும் இசையும் நிரம்பியிருக்கின்றன. மூன்று தலைமுறைகளையும் விருப்பங்களே இயக்குகின்றன. அந்த விருப்பங்கள் ஒரு கருப்புக் கூழாங்கல்லாகவும் இருக்கலாம். அதை கனகாங்கி போன்றோர் பறித்துத் தண்ணீரின் ஆழத்தில் எறியவும் எறியலாம். ஆனால், உறுதியான கற்கள் நீரில் கரைந்துவிடுமா என்ன!