சலபதி 50: தொடரும் பயணம்
ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு (1967) 50 வயது நிறைவுற்றதையடுத்து, 2019இல் சென்னையில் நடைபெற்ற அவரது பங்களிப்புகள் குறித்து கருத்தரங்கில் வாசிக்கப் பெற்றவற்றுள் 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். காலச்சுவடு, இந்து லிட் பார் லைஃப், கடவு ஆகிய அமைப்புகள் இணைந்து இரு நாள்கள் நிகழ்த்திய 'விரிவும் ஆழமும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் சமகால அறிஞர்கள், படைப்பாளிகள் என ஏறக்குறைய 50 பேர் பங்களித்தனர். வ.உ.சி., புதுமைப்பித்தன், பாரதி, உ.வே.சா., பெரியார் போன்ற தமிழ்ப் பேராளுமைகள் பற்றிய ஆய்வுகள், பதிப்பு முயற்சிகள், இலக்கிய ஆக்கங்கள், நட்புப் பாராட்டல், ஆங்கிலப் படைப்புகள் எனப் பல்வேறு துறைகள் சார்ந்த 2018 வரையிலான சலபதியின் பணிகள் பற்றிய அறிமுகங்களும் மதிப்பீடுகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிறிதும் மிகை தோன்றாப் பாராட்டுகளும், ஆழங்களில் புகுந்து புறப்பட்டு வந்த மதிப்பீடுகளும் கொண்ட, விமர்சகரைப் பற்றிய விமர்சன நூல் இது.
