அன்னா கரீனினா
அன்னா கரீனினா - லியோ டால்ஸ்டாய்( தமிழில் - நா.தர்மராஜன் ) : ( 2- Parts) அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்? உண்மையான தீவிரமான நேசம் என்பது ஒழுக்கக் கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா? காதலும் காமமும் எங்கே முயங்குகின்றன, எங்கே பிரிகின்றன? இவ்வாறு அந்த மையக்கேள்வியை தல்ஸ்தோய் விரித்துக்கொண்டே செல்கிறார். மிகச்சரளமாக வாசிக்கும்படியாகவும், அதேசமயம் முழுமையாகவும் இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார் நா.தர்மராஜன் அவர்கள். அவர் ருஷ்யாவில் பல காலம் இருந்தவராதலால் நுண்தகவல்கள் எல்லாம் சீராக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தல்ஸ்தோய்யின் நாவல்கள் வெறும் மானுடசித்திரங்கள் மட்டுமல்ல. அவை ருஷ்யப் பண்பாட்டின், ருஷ்ய நிலத்தின், ருஷ்ய வரலாற்றின் பதிவுகளும்கூட. அவை முழுமையான நாவல்கள். வாசகனுக்கு ருஷ்யாவில் வாழ்ந்து மீண்ட அனுபவத்தை அளிப்பவை. அந்த அனுபவத்தை அளிப்பதாக உள்ளது இந்த மொழியாக்கம்.