ஆலமரத்துப் பறவைகள்
வீடு, நிலம், கிணறு என எல்லாவற்றையும் இழந்து தன்னை மாட்டுத்தொழுவத்தில் வாழும் கேவலத்திற்குத் தள்ளிய கையாலாகாத தன் கணவனை ஏமாற்றுவது தவறில்லை என்று நினைத்துக் கணவனுக்குத் துரோகம் செய்துவிடுகிறாள் மைதிலி. செல்வங்கள் அனைத்தையும் மட்டுமில்லாமல் மானம் மரியாதையையும் இழந்து நிற்கும் தங்கச்சாமியோ ஊர்மாட்டை மேய்த்துக் காலந்தள்ளும் நிலைக்கு ஆளாகின்றான். ஊரே அவனை எள்ளி நகையாடுகிறது. இவை அனைத்திலிருந்தும் விடுபடத் தற்கொலை செய்து கொள்வதென முடிவுசெய்து அதிலும் தோல்வி அடைகிறான். இவர்கள் வாழ்வில் வந்த சோதனை போதாதென்று ஊரில் ஒரு கொலை விழுவதோடு ஒரு தெருவே எரிந்து சாம்பலாகி விடுகின்றது. கொலையுண்டவனுக்கும் தங்கச்சாமிக்கும் தொடர்பு இருக்கவே போலிஸ் அவனைச் சந்தேகிக்கின்றது. இதன் ஊடே அம்மணத்திருடன் ஒருவன் இரவில் கோமாளித்தனம் செய்து ஊரையே கலக்குகிறான். கொலை செய்தவன் யார்? பிடிபடுவானா? மைதிலி - தங்கச்சாமி இருவரின் வாழ்வு சீராகுமா? இவற்றை ஆராய்வதோடு மின்சாரம் வருவதற்குமுன் இருந்த கிராமத்து வாழ்க்கையையும் விளக்குகின்றது ஆலமரத்துப் பறவைகள்.